Wednesday, July 28, 2010

தமிழ்ப் பைந்தேவி

தமிழ்ப் பைந்தேவி


முன்னிருந்த பாலி மொழியும்கீர் வாணமும்

துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே

பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி

மண்டலத்தி லேபேர் வளநாட்டின் – மண்டுநீர்ப்

பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்

சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்

பேரவையி லேநூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப்

பாரரசு செய்ததமிழ்ப் பைந்தேவி

                                              தமிழ்விடுதூது



சுள்ளென்று எறிக்கும் சுடரோன்பால் தோன்றியுயிர்

உள்ளம் துலக்கி உலாவலின் – தெள்ளுபுகழ்ப்

பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ்

ஒண்டமிழ் என்மனார் போந்து

                                                                                                                  பழம்பாடல்



ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்நேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்நேர் இலாத தமிழ்

                                                                                            தண்டியலங்கார உரைமேற்கோள்


பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து

இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் ஏன

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்

                                                                                                                               வில்லிபாரதம்


வரலாற்றுமுறை தெரியாதிருந்த காலத்தில்

தொன்ம(புராண)முறையில் தமிழைத் தற்காத்த

சமயநெறித் தமிழ்ப்பெருஞ்சான்றோர்



வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி; அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்று விடைபாகர்,

கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்!



இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர், இயல்வாய்ப்ப

இருமொழியும் வழிப்படுத்தார், முனிவேந்தர் இசைபரப்பும்

இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்,இவ்

இருமொழியும் நிகர்என்னும் இதற்குஐயம் உளதேயோ?

                                                                                                                                  காஞ்சிபுராணம்



மறைமுதல் கிளந்த வாயான்,

              மதிமுகிழ் முடித்த வேணி

இறைவர்தம் பெயரை நாட்டி;

              இலக்கணம் செய்யப் பெற்றே;

அறைகடல் வரைப்பில் பாடை

             அனைத்தும்வென்று; ஆரியத்தோ(டு)

உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை

             உள்நினைந்து ஏத்தல் செய்வாம்!

                                                                                                    சீகாளத்திப் புராணம்



வேலையில் வீழ்த்த கல்லு(ம்),

              மென்குடம் புகுத்த என்பும்,

சாலையில் கொளுவும் தீயும்,

              தரங்கநீர் வையை ஆறும்,

சோலைஆண் பனையும்,  வேதக்

              கதவமும் தொழும்பு கொண்ட

வாலையாம் தமிழ்ப்பூஞ் செல்வி ...

                                                                           குற்றாலத் தலபுராணம்



கண்ணுதல் பெருங்கட வுளுகழ கமோ(டு) அமர்ந்து;

பண்ணுறத் தெரிந்(து)ஆய்ந் த,இப் ப சுந்தமிழ், ஏனை

மண்ணிடை சிலஇலக் கண வ ரம்பிலா மொழிபோல்,

எண்ணிடை படக் கி டந்ததாய் எண்ணவும் படுமோ?



தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை

உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்

கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்

தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!



விடைஉ கைத்தவன் பாணினிக்(கு) இலக்கண(ம்) மேனாள்

வடமொ ழிக்(கு)உரைத்(து) ஆங்(கு);இயன் மலையமா முனிக்குத்

திடம்உ றுத்தி;அம் மொழிக்(கு)எதிர் ஆக்கிய தென்சொல்

மடமகட்(கு) அரங்(கு) என்பது வழுதிநா(டு) அன்றோ?
                                                                                       திருவிளையாடல் புராணம்



வரலாற்றுக் குறிப்பு:-

தமிழ்மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் மூன்றாம் தமிழ்ச்சங்கம் எனும் கடைசங்க காலத்திற்குப் பிறகு, மூவேந்தரும் தம் ஆட்சி ஆளுமை இழந்திருந்த 300 ஆண்டுகாலத்தில், களப்பிரர், பல்லவர் எனும் பிற இனத்து அரசர்கள் தமிழகத்தை வசப்படுத்தி ஆண்டுவந்தனர்.


இந்தக் காலக்கட்டத்தை ஆரிய வழியினர் மிகநன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் தமிழைத் துணிந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் சிறுமைகூறிய வேளைகளில், தமிழ்ப்புலவர்கள் எதிர்ப்புகாட்டி உள்ளனர். விதிவிலக்காக ஒருசில நன்றியுள்ள ஆரியப் புலவர்களும் தமிழுக்காகக் குரல்கொடுத்துள்ளனர். அதன்பிறகு, கடந்த 500 ஆண்டுகாலத்தில், தமிழ்வேந்தர் யாருமே இல்லாதுபோன நிலையில், தமிழ்ப்புலவர்கள் தம் படைப்புகளில்கூடத் தமிழைத் தற்காத்துக்கொள்ளும் படியாகத் தமிழ்ப்பெருமக்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புறுத்தி வந்துள்ளனர்.

இது வள்ளலார் காலம் வரையில் இவ்வாறு தொன்ம முறையில் தொடர்ந்து காணப்படுகிறது. இந்தத் தமிழ் ஆரியப் போராட்டம் கடந்த 18 நூற்றாண்டு காலமாகத் நீறுபூத்த நெருப்பாக இருந்துவருகிறது.


அறிவியல் முறையிலான ஆராய்ச்சிமுறைகள் வாய்க்கப்பெற்றுள்ள இக்காலத்திலும்கூட இப்போராட்டம் புதிய கலைமுறைப்படி மேலும் தொடர்ந்துகொண்டு வருகிறது. தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் ஒரு மறுமலர்ச்சிநிலை தமிழுக்கு ஏற்பட்டுப் பாவாணர் வழியில் வளர்ந்து வருகிறது.


Sunday, July 18, 2010

உலகச்
செம்மொழி மாநாடு 


கட்டுரை : தென்கிழக்காசியாவில் தமிழ், மலாய்மொழி வேர்நிலை உறவுகள்

கட்டுரையாளர்:   திரு. இர.திருச்செல்வம்,

                                      தலைவர், தமிழியல் ஆய்வுக் களம், மலேசியா.



மலாய்ப் பெருமண்டலம் / மலாய்கூறு நல்லுலகம்



அறிமுகம்:

தென்கிழக்கு ஆசியாவுக்குப் பாண்டியர் தொடர்பு தொல்பழந் தொடர்பு. சேரர் தொடர்பு புருணை என்னும் பொருநைத் தீவுக்கும், பனைத்தீவு என்னும் பிலிப்பைன்சு தீவுக்கும் பெயர்வழங்கிய பழந்தொடர்பு. மூவேந்தருள்ளும் சோழர்தம் தொடர்பு என்பது ஒரு முழுதளாவிய அரசியல்-பண்பாட்டு-கலை-இலக்கிய-சமயப் பெருந்தொடர்பு; உறவு; ஆளுமை.

குமரிநாட்டுக் காலமுதல் இத்தொடர்பு நிலவிவருகிறது. தொன்மதுரை ஆகிய தென்மதுரை அமைந்திருந்த அதே வரைக்கோட்டில்தான் நன்மதுரை என்னும் சுமதுரா அமைந்துள்ளது. அதுபோல, சாவகம், கடாரம் என்று அடுக்கிக்கூறப் பல்வேறு வரலாற்று உறவுகள் உள.

இற்றைக் காலத்திலிருந்து தொன்மை நோக்கிப் போவோமானால், ஆங்கிலர் உறவு, போர்த்துக்கீசியர் உறவு, அரபியர் உறவு, பாரசீகர் உறவு, சமற்கிருத-பாலி(பல்லவ) உறவு, தமிழ் உறவு, தொல்பழந்தமிழ் உறவு என்று மலாய்மொழியின் காலநிரல்பட்ட உறவுக்குத் தடங்காண முடிகிறது. மேற்கூறிய எல்லா மொழிகளின் உறவுக் காலத்திலும் தமிழ் மொழியின் உறவு இடையறாத நெட்ட நெடிய உறவாக வந்துள்ளது. ஏன் இன்றுங்கூட அவ்வுறவு தொடர்கின்றது என்பதே வியப்புக்குரிய பெருஞ்செய்தியாக உள்ளது.

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இசுலாமிய வழியில் பலபல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்கூட, மலாக்காப் பேரரசு கொடிகட்டிப்பறந்த அந்தக் காலத்திலும் தமிழர் இனமொழிப் பண்பாட்டு உறவுகள் விலக்கொணாத முகாமைபெற்று விளங்கியுள்ளன. அவ்வரசும் வீழ்ந்து போன போர்த்துக்கீசியர், பிரித்தானியர் காலத்திலும்கூட முன்சி அப்துல்லா என்னும் பெயர் கொண்ட இசுலாமிய தமிழரின் சிந்தனைப் புரட்சி மலாய்கூறு நல்லுலகிற்கு மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சாவக மாந்தன்(Jawa Man – 500 000 B.C), பேரா மாந்தன்(Perak Man – 40 000 B.C.) என்று இம்மண்டலத்திற்குக் கிறித்துவுக்கு முற்பட்ட தொல்மாந்தச் சான்றுகள் உள்ளன. பேரா மாந்தனுக்கு அடுத்து, 8000 ஆண்டுக்கு முற்பட்ட பேரா பெண்(Perak Woman) எலும்புக் குடும் கிடைத்துள்ளது. இவை தொல்மலாய் முன்னோரின் எலும்புக் கூடுகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குவா சா, குவா நியா என்னும் குகையிடங்களில் 10,000 ஆண்டுக்கு முற்பட வாழ்ந்திருந்த தொல்மாந்தர் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.





மொழிவழி நோக்கினால், மலாய் மொழியும் சாவக மொழியும் தொல் ஆத்திரோனீசியா(Proto Austronesian Language) மொழியினின்றும் கிளைப்புற்றுள்ளன என்பது சேம்சு தி. காலின்சு(James T. Collins) முதலான ஆய்வறிஞர்தம் துணிபு. சமயமத ஏற்பாடுகள் எதுவுமே இல்லாத இயற்கைநெறிக் காலம் தொடங்கி அதன் தொன்மையை அறிஞர் உய்த்துணர்ந்து கூறியிருகின்றனர். அம்மொழியில் புகுந்துள்ள சொற்களைத் துறை வாரியாகப் பகுத்து அதன் வளமை, வளர்ச்சி, மாற்றம்,... என்பவற்றை நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். பின்வரும் மேற்கோள் செய்தியைக் காண்க.

Bila disebut perkataan ‘Melayu’, terus tergambar dalam benak fikiran bahawa orang Melayu berkulit gelap/sawo matang , tubuh badan bersaiz sederhana dan berambut hitam. Gambaran yang hampir sama juga pernah diceritakan oleh Frank Swettenham dalam makalahnya “The Real Malay” yang menggambarkan lelaki Melayu adalah rendah, berambut hitam lurus, berkulit coklat gelap serta mempunyai bentuk hidung dan bibir yang besar.

Perkahwinan campur antara bangsa bukan Melayu dan Melayu dewasa ini sedikit sebanyak merubah identiti dan perwatakan unik orang Melayu jika dibandingkan dengan orang Melayu pada zaman dahulu. Bangsa Melayu dilihat banyak mendiami sekitar Asia Tenggara dan mengamalkan adat resam, budaya dan bahasa yang sama.

Istilah Melayu boleh membawa maksud dan pengertian yang berbeza iaitu:-

Orang Melayu, sebuah kaum atau suku yang merupakan penduduk asal Asia Tenggara berketurunan
   Austronesia.

Bahasa Melayu, bahasa ibunda kepada orang Melayu di Asia Tenggara.

• Kepulauan Melayu, kawasan yang didiami oleh penduduk berketurunan Austronesia dan juga nama lain   bagi Nusantara.

• Tanah Melayu, nama lama bagi Semenanjung Malaysia.

• Semenanjung Tanah Melayu, sebuah semenanjung utama yang terletak di Asia Tenggara.

• Sungai Melayu, sebuah anak sungai yang terletak di Sumatera, Indonesia.

• Kerajaan Melayu, lokasi sebuah kerajaan purba yang terletak di Sumatera, Indonesia.

• Rumpun Bangsa Melayu, nama lain bagi bangsa Austronesia atau Melayu-Polinesia di Asia Tenggara.

• Ketuanan Melayu, satu ideologi politik yang diamalkan di Malaysia.

Diambil daripada http://ms.wikipedia.org/wiki/Melayu




மலாய்(மலாயு) என்னும் சொல்லின் வரலாறு

மேற்குச் சுமத்திராவில் உள்ள புக்கிட் கோம்பாக்(Bukit Gombak) எனும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில், “மலையூர்புரம் – Malaiyur-pura” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. அதற்கு விளக்கமாக “kota malaiyur – மலையூர்க் கோட்டை” அல்லது “kota gunung - மலைக்கோட்டை” என்று ஆய்வாளர்கள் பொருள் கூறுகின்றனர். [ ‘Kota’ என்பது கோட்டை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு]. மலாய்(மலாயு) எனும் சொற்பிறப்பு வரலாற்றை “ malaiyur > malaiyu > malayu > melayu” என்று அவர்கள் விளக்கப்படுத்துகின்றனர். இது தெற்றெனத் தமிழ்வழி மூலத்தினைக் காட்டுகின்றது.

மற்றபடி, மலாயு என்னும் சொல் வழக்காறு சீனநாட்டு புத்த அறிஞர் ஐ சிங்(I - Tsing) அவர்களின் பயணக் குறிப்பேட்டில் ‘ma-lo-yu’ என்று இரண்டு மலாய் அரசுகளைப்பற்றி கி.பி.675 வாக்கில் குறித்துள்ளார். கி.பி. 644-645 வாக்கில் சீன அரசருக்கு மலாய் அரசர் தூது அனுப்பியதாகச் சீன அரசக் குறிப்பு உள்ளது. இவை மலாய் என்னும் சொல் எழுத்துச் சான்றாகக் கிடைத்துள்ளதற்கான வரலாற்று மூலங்கள்.

இதைத் தவிர்த்து,  இறைதூதர் இபுறாகிம் அவர்களின் மூன்றாம் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளின் வழித்தோன்றல்களே மலாய் மாந்தர் என்னும் கொள்கை அல்லது நம்பிக்கையும் உள்ளது. அதன்படி, இறைதூதர் இபுறாகிம் அவர்கள் கல்தேயா(Chaldea) நாட்டில் மலை – ஊர்(Malai - Ur) என்னும் இடத்தில் தோன்றியவர் எனனும் காரணம் பற்றியும், மேற்குறித்த அவர்தம் மனைவி இற்றைய இந்தோசீனாவின் மலா/மலை(Mala/Malai) எனும் மலைப்பகுதியில் தோன்றியவர் என்ற காரணம் பற்றியும் மலாய் என்ற பெயர் உண்டானது என்பர். அப்படிக் கூறுகின்ற இடத்திலும் தமிழ்தான் வந்து விளக்கமளிக்கிறது. மலை, ஊர் என்பவை தமிழ் என்பதற்கு ஐயமுண்டா என்ன? இவை தமிழ்ச்சொற்கள் என்பதை இவ்வரலாற்றை எடுத்துக்கூறிப் பெருமிதப்படுகின்ற மலாய்மாந்தர் அறிந்ததவர்கள் அறியாதவர்கள் என்று இருநிலையில் உள்ளனர்.

மேலும், இதன் வாயிலாக, தமக்கு அரபிய, இசுரேலிய இனமூல உறவிருப்பதாகவும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அவர்களின் மூலவர்களின் மொழியமைப்பினை ஆராய்கின்ற போது, அது தமிழ்மொழியாக இருக்கிறது. உலக முதல்மாந்தர் பேசிய மொழியும் அவர்தம் பரம்பரையினர் உலகமெலாம் பரவிப் பேசிய பெருமொழிகளும் தொல்பழந்தமிழே என்கின்ற உண்மையும் இவற்றுடன் தோன்றி விளங்குவதையும் நடுநிலையாளர் நன்கு உணரக் கிடக்கின்றது. செமொழி வரிசையில் நிற்கின்ற எல்லா மொழிகளும் தமிழோடு மொழி, பண்பாட்டு உறவுகளைக் காட்டுகின்றன. அவை தமிழைப் பிரிந்து வேறாகிப்போன வரலாற்றுத் தடம் நன்கு புலப்பட்டுத் திகழ்கின்றது. அதனை மலாய்மொழியும் மெய்ப்பிக்கின்றது.

Dari apa yg saya baca,Melayu/Mala/Malai bermaksud gunung,jadi melayu bermaksud bangsa gunung,lagipun bukan ke bangsa Melayu/malai/mala dari keturunan Nabi Ibrahim a.s.,jadi x mustahil bangsa Melayu ni berasal dari salah satu kaum Bani Israel yang hilang.nak tahu mengenai sejarah2 dan rahsia2 bangsa Melayu/Mala/Malai/Bangsa Gunung yg berasal/ dilahirkan dari ibunda Keturah/Qeturah, isteri nabi Ibrahim yg berasal dari kerajaan melayu kemboja purba serta hubung kait bangsa Melayu dengan salah satu kaum bani Israel yg hilang dah telah mendapat hidayah Allah SWT dan akan menentang kaum2 Bani Israel yg sesat aka bangsa yahudi kat negara haram israel sekrang di Tanah Yang Dijanjikan.
Mengikut catatan Ibnu Yusof dalam kitab Permata Yang Hilang (yang saya curi-curi baca sewaktu berusia 12 tahun), ada kemungkinan juga bahawa nama Melayu itu berasal dari perkataan Malai-Ur sempena nama kerajaan Chaldea tempat asal Ibrahim. Ada juga pendapat menyatakan bahawa Melayu berasal dari perkataan Malai dan Yunan.

Orang Melayu dikenali sebagai Orang Malai oleh beberapa bangsa lain tapi orang Arab cenderung memanggil orang Melayu sebagai Bani Jawi. Orang Malai (orang bukit atau gunung) ini mungkin telah mendiami Kemboja sebelum kedatangan Ibrahim ke situ, dan hampir pasti Keturah adalah orang Malai.

http://ppdkerian.edu.my/portal/index.php

Kiriman pada Tuesday, June 29 @ 00:26:25 MYT oleh semadinadai




உடன்கொண்ட சொல்வளம் – கடன்கொண்ட சொல்வளம்

மலாய் மொழியில் வழங்கும் தமிழ்ச்சொற்கள் இருவகைப்படும். முதல்வகை, மிகு தொன்மையில் அம்மொழி தொல்பழந்தமிழிலிருந்து - பொதுமுன்னோரிடமிருந்து பிரிந்துசென்ற காலத்தில் உடன்பிரிந்த அற்றைய சொற்கள். இரண்டாம் வகை, மீண்டும் கடந்த 3000 ஆண்டுகளாக நன்கு வேறுபட்டு வளர்ந்த நிலையில் கலந்த – கடன் கொள்ளப்பட்ட சொற்கள். முதல்வகையில் வேர்ச்சொற்களும் அடிப்படை வினைச் சொற்களும், உருபுகளும், இடைசொற்களும் எனப் பலவும் அடங்கும். இரண்டாம் வகையில் துறைசார்ந்த சிறப்புக் கலைச்சொற்களும் பிறவும் அடங்கும். இவை இடைக்கால, பிற்காலத் தமிழ நாகரிகம் நன்கு வளர்ந்து பரவிய காலத்தவை.

இதுவரையிலும் மிகப் பலரும் எளிதில் அறியத்தக்க முழுச்சொற்களைத்தான் பெரிதும் எடுத்துக்காட்டியுள்ளனர். வடநூலோர் அல்லது அவர்தம் சார்பார்வலர்கள் மலாய்மொழியில் மொத்தம் 66 தமிழ்ச்சொற்களே உள்ளன என்றொரு தப்பான தரவினைப் பதிவுசெய்துள்ளனர். இந்தோனேசிய மலாய்வழக்கில் 83 தமிழ்ச்சொற்கள் இருக்கின்ற என்று அங்கும் தவறான தரவே பதிவாகியிருக்கிறது. அதற்குத் தமிழறிந்த சிலரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போயுள்ளனர். எடுத்ததற்கெல்லாம் சமற்கிருத மொழிவழி சொல்மூலம் கூறுதல் என்னும் வேர்வடிவங்களைக் கண்மூடித்தனமாகக் கூறுகின்ற குருட்டு நம்பிக்கையும் நடைமுறையுமே இதற்கான பெருங்காரணமாகும்.

என் கடந்த கால்நூற்றாண்டு கால வேர்ச்சொல் ஒப்பியல் ஆராய்ச்சி வழியாக, நான் பல்லாயிரக் கணக்கான தூய செந்தமிழ் உறவுக்கூறுகளைக் கொண்டுள்ள செவ்விய சொற்களை மலாய் மொழியிலும் அதனை ஒத்த பிற தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கண்டுபிடித்துள்ளேன். இதற்கு, இம்மொழியை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தடங்கண்டு காட்டியுள்ள பன்னாட்டு ஆய்வறிஞர் கூற்றுகளும் முடிபுகளும் பெருந்துணை புரிந்துள்ளன. ஒ.டி. தசெக்(O.T.Dussek), ஆர். சேம்சு தி. காலின்சு(James T. Collins) ஓ. வின்சுடட்(R.O.Winsted), ஆர்.சே. வில்கின்சன் (R.J.Wilkinson)... என்றொரு பெரிய அறிஞர்குழாம் உளது. மலாய்வாணருள் பேரா. முனைவர் அசுமா அசி ஒமார், பேரா. அவாங் சாரியான், பேரா. நிக் சாபியா அப்துல் கரீம் போன்றோர் குறிப்பிடத்தக்க ஆய்வறிஞர்களாவர்.

திரு. திருமாமணி என்பவர் தமிழ் யாப்பியல் கூறுகள் வழி மலாய்ச் செய்யுள் ஒப்பாய்வு செய்துள்ளனர். என் ஆய்வுவழி 66 அல்ல பன்னூற்றுக் கணக்கான முழுத்தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று மலாய் அறிஞர்களிடமே எடுத்துக்காட்டியுள்ளேன். அவர்களுள் வடமலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. இபுறாகிம் என்பவர் தம் பன்மொழித் திறத்தினால் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். முன்பு அவரும் எல்லாம் வடமொழி கொடுத்துள்ள கொடைகளே என்னும் தவறான முடிபின்வழி இருந்தவர்தான். வடமொழிக் கொடைகள் வேறு உள. அவை பல்லவர்வழி சார்ந்தவை.

இனித் தொடர்ந்து; தமிழ்மொழிக்கும் மலாய்மொழிக்கும் உள்ள வேர்நிலை உறவுக்கு ஒருசில சான்றுகளைக் காண்போம்.

அ. விளியொலிகள் :
1. ஏய் >  Eh [அண்மை விளி, வியப்பு]

2. ஓய் > Oi [சேய்மை விளி] 3. ஓ > Oh [வியப்பு, தெளிவு, இழிபு]

4. ஆ > Ah [ஒத்திசைவு - ஆம்] 5. அந்தோ > Aduh

6. அம்மோய் > அம்போய் (Amboi)
7. ஆ >  Ah [வியப்பு]         8. ஐ > ஆய் > ai [வியப்பு]



ஆ. வேற்றுமை உருபு :
1. கு > Ke
2. உடங்கு > Dengan
3. உடன் > டன் > டான் > Dan

இ. சுட்டு :
1. இன் (இது) > Ini
2. இன்(இங்கு) > ஈன் > Sini
3. அன் (அங்கு) > ஆன் > Sana 3.1 ஆனு–si anu[ அன்னோன்]


இடைச்சொல் :
‘இ’ என்பது ஓர் வினைநிலை குறித்த இடைச்சொல். அஃது எச்ச வினையாய்த் தமிழில் வருவது போலவே, மலாயிலும் வருகிறது. நிறு + இ > நிறுவி(நிறீஇ) என்று வரும்; சொல் + இ > சொல்லி எனவும், வெட்டு + இ > வெட்டி எனவும் வரும். ஏவல்வினை வடிவு எச்சவினை வடிவாகி வரும்.

இப்படித் தன்வினை நிலையில் மட்டுமல்லாமல், பிறரைச் செய்விக்கும் நிலையிலும் கட்டுவித்தான், ஆட்டுவித்தான், கொடுப்பித்தான், எழுதுவித்தான், வருவித்தான், ஏற்றுவித்தன்... என்று வரும் சொல்லாட்சிகள் பிறரை வினைப்படுத்திய தன்மையைக் காட்டுகின்றன.

மலாயில், lalu – lalui – melalui – dilalui; sanjung – sanjungi – disanjungi –meyanjungi; ..என்று இதுவரை கட்டியவை வினைச்சொல்லைத் தலைச்சொல்லாகக் கொண்ட வடிவுகள். அடுத்து; பெயர்ச்சொல்லைத் தலைச்சொல்லாகக் கொண்ட சொல்லாட்சிகளைப் பார்ப்போம். Ketua(தலைவர்) – ketuai – mengetuai - diketuai; milik – miliki – memiliki – dimiliki; sudah – sudahi; akhir – akhiri – diakhiri, mengakhiri; ... தலைச்சொல்லுடன் முன்னொட்டு சேர்ந்துள்ள வடிவில் இவை உள்ளன.

தமிழில் உள்ளது போல, மலாயிலும் ‘இ’ எனும் இடைச்சொல் பன்முகம் கொண்டதாகக் காணப்படுகிறது. வளைஇ, அளைஇ, கொளீஇ, கழீஇ, என்பன போலும் சங்ககால வினைசார் வழக்குகளும், தலைஇ(முதல் – முன்; தலைப்பட்ட – தலைப்பட்டு ), இருளி(இருள் + இ = இருண்டு), இருட்டு(இருட்டு + இ)...குவைஇ பெயர்சார் வழக்குகளும் கருதத்தக்கன. இவை போல, வினையும் பெயருமாய் உள்ள நசைஇ, உரைஇ என்பவும் உள்ளன.


ஈ. கிளைவேர்ச்சொல் :

1. சூர் = அச்சம். சூரம் > Seram = அச்சம்.

 2. செகு(வெட்டு, நீக்கு) > Cegah

3. தகு(தகை = தடு, தவிர், நீக்கு) > Tegah

4. பற(வு) > Baroh (பறவை) – [Jawa]

5. சே(தங்கு) > Sewa (தங்குதற்கான வாடகை)

6. குடங்கு(குடங்கர்)> JK Kedung [குழி]

7. பூசு(கழுவு, கழுவித் தூய்மை செய்) > Basuh

8. தொல்(லு) > Dulu [முன், முன்பு]

9. செம் > Semat [ செம்முதல்(கட்டுதல், பிணித்தல்) ]

10. பிள் > Belah [ பிள ]

11. கம்(மு) > [ஒடுங்கு, குன்று, குறைந்திடு] Kemis, Kemek, Kempis, ...

12. அம்பு (அம்பர் – மேல், மேலிடம்) > Ampuh [ Top]

13. அங்கு(பிள) > Angga [அங்காத்தல் > வாய்பிளத்தல், வாய்திறத்தல்]

14. குறு(வெட்டு, அறு) > Goroh/Gorok, Kerat 15. கரடு =Kerutu.

16. குறள் > கறள் > கறளை = வளர்ச்சியற்றது, குறள் – Kerdil.

17. கண் > கண்(ணுதல்) > கண்ணல் > காணல் > Kenal(கண்டு அறிந்திருத்தல்).


உ. வழக்கற்ற சொற்கள் :

1. அடை > Adai–adai balai[அடைவலை = அடைப்பதற்கு–மூடுதற்கு உதவும் வலை]

2. ஒக்கு–அக்கு > aku [ஒப்புதல்,-akuan] 2.1 ஒக்குறு(ஒத்தல் > akur[agree]

3. வாய் > Wai [ நீர் ஓடும் வழி ] 4. கது(மூடு) > Katup [கதுபு > கதவு]

5. இறும்பு > Rambun [Undergrowth yet to become secondary jungle-சிறுபுதர்]

6. தோரை (குருதி) > Darah

7. செத்து > Cetak[ ஒத்துப் பதித்தல், அச்சு - அச்சிடுதல்]

8. குன்றி(பொன் அளவைப்பெயர்) > Kendri > kendi > kundi
[Yang kurik itu Kundi]


முன்னிலை அசைச்சொல்லாக ‘lah’ எனும் சொல் வழங்கப்படுகிரது. இது யாழ, எல்லா – ஏலா, எலே – ஏலே ... என்பவற்றுக்கு உறவு காண்கிறது. வாலே, போலெ என்னும் நெல்லைப் பேச்சுவழக்குக்கு ஒத்ததாக ‘lah’ என்னும் மலாய்வழக்கு ‘marilah’, ‘pergilah’, போன்ற சொல்லாட்சிகளில் மிகப் பரவலாக உள்ளது.



ஊ. ஒலிக்குறிப்பு :

1. (திடு)திப்பு > Tub > tub-tub [suddenly] - [ tub-tub >
top-top = suddenly] – [ Tiba-tiba = திடீரென்று. ]

2. கப்பு(விரைவுறுதல் குறிப்பு) > Gopoh. Gopoh-gapah

3. குறு > கொறு(குறட்டை ஒலி)–கொறுக்கை(குறட்டை) > Keru/Geruh – geru



எ. ஒரே வேர்வழிச் சொற்படைப்பு :

வேர்ச்சொல் : கும் [கூடு-கூடுதல்-கூட்டுதல், கூட்டம் – கூட்டமாயிருத்தல், கூடியிருத்தல். பெரிதாகு, விரிவுறு, பரவு, பருமையுறு, பெருகு – பெருக்கமடை, அடர்த்தியாயிரு]

1. கும் > கும்பு > கும்பல் = கூட்டம், திரள், குவியல். 1.2. கும் > கும்மு(தல்) > கும்மலித்தல் = பருத்தல், உருவம் பெருத்தல். 1.3. கும் > குமி > குமித்தல் = குவித்தல், திரட்டிச் சேர்த்தல். 1.4. கும் > குமு > குமுக்கு = திரட்சி, சதை, மாவு முதலியவற்றின் திரண்ட அமைப்பு. 1.5. குமிழ் = நீருகுக்குள் கிளம்பும் காற்று உப்பலிப்பு.



2. கும் > கொம் [மோனைத் திரிபு] > மலாய்மொழியில் : kum – kom – kem - kam; gom – gum - gem. 2.1 Kumpul = கூடு, சேர், தொகு, கூட்டு, திரட்டு. 2.2 Kumpulan = கும்பல், கூட்டம், குழு. 2.3 Gumpung = புதர் 2.4 Kumba/gumba = குமுக்கு (யானையின் தலைமுட்டு). 2.5 Gumbang/gombong = கும்பம்(குடம்) 2.6 Gomok = உப்பலான உப்பியுள்ள ஒருவகை தவளை. 2.7 Gemuk = பருமை, பருமன், தடுப்பம். 2.8 Gompiok = Jawa Kuno(தொல்சாவகம்) (அடர்த்தி, தடுப்பம்). 2.9 Kampung = (கூட்டமாகக் கூடிவாழும் குடியிருப்பு – சிற்றூர் – குப்பம்.) Berkampung எனில், ஒருங்கு கூடியிருத்தல், திரண்டிருத்தல்). 2.10 Kembol = (உள்ளீடு அதிகரிக்கையில் பருப்பமடைதல்). 2.11 Kembong = உப்பசம். 2.12 Kembang = பரவுதல், பரவலித்தல்.



3. இதுபோல, துளைத்தல்-தோண்டுதல் வினைக்கருத்துள்ள குறு (கொறு > கோறு) என்னும் கிளைவேரின் வழியாக, 3.1 Korek(தோண்டு), 3.2 Keruk(குழி), 3.3 Kerbuk(துளைத்தல்), 3.4 Kerung(உட்குழிவு), 3.5 Gerek(குழிவு), 3.6 Gerudi(துரப்பணம்), 3.7 Gerobok(குழிப்பிடமுள்ள பெட்டி), 3.8 Gerupuk(சேற்றுக்/குழிக்குள் விழுதல்), 3.9 Gerong(மண்ணுக்குள் உள்ள உட்குழி), 3.10 Gerongga(உட்குழி), 3.11 Geronggong/ Geronggang(உட்குழி), 3.12 Kerongkong(தொண்டைக்குழி), ... போன்ற சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் எல்லாம், உள்துளைப்புப் பெற்றுள்ள அமைப்புடையவை.



4. பொங்கு(தல்) என்னும் எழுச்சிநிலை குறித்த வினை அடியினின்றும் 4.1 Bonggol(திமில், மரமுடிச்சு, வீக்கம், புடைப்பு), 4.2 Bongkol(முண்டு), 4.3 Bongsor(பாரிய உடம்பு), 4.4 Bongak(செருக்கு, இறுமாப்பு), 4.5 Bongkah((திரளை), 4.6 Bongkak(இறுமாப்பு), 4.7 Bongkong(புடைப்பு, மரமுடிச்சு),... போன்ற சொற்குழாமும், பொங்கு > பெங்கு(Bengg)– என்று திரிந்துள்ள வடிவிலிருந்து; 4.8 Benggal – Benggil – Benggol(வீக்கம், புடைப்பு) – 4.9 Bengkak(புடைப்பு), 4.10 Bengkar(மலர்தல், விரிதல்), 4.11 Bengul(வீக்கம்), 4.12 Bangkau(இயல்பான அளவினும் மீறுதல்),... என்று ஆலமரக்காடு போல பரந்து-விரிந்துசெல்லும் சொற்களின் வேர்மூலக்கருத்தின் தொடர்ச்சியுறவு அறவுபடாத செவ்விய போக்கினைக் கூர்ந்து கவனிக்க.



இந்தச் வேர்வழிச் சொல்லாக்க அமைப்புமுறை, மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் நிறுவியுள்ளபடி; உலக மொழிகள் அனைத்தும் ஒரே மூலமொழியின் விரிபாக்கமும் திரிபாக்கமுமேயாகும் என்ற மொழியியல் உண்மை இதன்வழி மெய்ப்படுகின்றது. இப்படியாகப் பலநூறு வேர்வழி உறவுகளை மலாய்மொழியில் மட்டுமன்று உலகமொழி அனைத்திலும் எடுத்துக்காட்டிக்கொண்டே போகலாம்.


மலாய்கூறு நல்லுலகில் பிறமொழிகளுடன் தமிழ் உறவு

தமிழ்                       மலாய் மலகாசி பாதாக் மதுரா மாகாசார் பூகிசு சுண்டா


பொறை(பாரம்)        berat      wezatra       Borat       Bero      Batala          wara      Beurat


தோரை(குருதி)       darah     Ra             Dara         doro           -             Dara         -


தரை                        darat          -            darat        Doro           -             Dara       Darat


பு(த்)து(வெள்ளை)   putih     Fotsi          Puti         Pote           -             Pute          -


தளை(கயிறு)           Tali      Tadi           Tali        taleh      Tali            Tali       Tali     


மடி(சாகு)                   mati     Mati          Mate        mateh        -             mate       Paeh


கற்பூரம்                     kapur      -             Hapur       kapor        -                -          Apu


தொறு                       turut        -              Turut      Toro       Turu         Tru         Turut






தமிழ்                        Farmosa  Tagalog  Bisaya  Tombulu  Dayak  JKuno  Jawa   Bali


பொறை(பாரம்)             -         Bigat    bigat     waha       behat    Wwat   Bot   Baat


தோரை(குருதி)            -         Dugo     Dogo    Raha      daha      Rah     Rah     -


தரை                              -        Dagat    dagat       -            -         Rat     Rat    Daet


பு(த்)து(வெள்ளை)    pute        Puti      Puti      Puti       puti       Putih  Putih  putih


தளை(கயிறு)           tarikh      Tali       -         Tali       Tali       Tali    Tali   Tali


மடி(சாகு)                  patei        matai     matai   Mate      mataei    Mati   Mati  Mati


கற்பூரம்                    apug        Apog    Apog     Apu     kapur     (h)apu  Apu     -


தொறு                       tugot      Togot     tugot       -           -        Tut    Tut     tuut






முன்னைச் சொற்கள்

வணிகர் > பணிகர் >  பணிக >  Peniaga
வாடை > Badai
சந்தனம் > Cendana
சண்பகம் > Cempaka
கோவலர் > கோபாலர் > Gembala
கொண்டை > Kondai / Kundai
செம்பு - செப்பு > Cepu
குறள்(மிகுகுள்ளம்) > Kerdil
நாடி > Nadi
நிரை > Nirai
புல்லு(தழுவு) > Peluk




இற்றைநாள் தமிழ்க்கொடைகள்

அப்பம், பணியாரம், புட்டு(பிட்டு), கறி, வடை, உருடை(ரோடா), கடை, முதல், கஞ்சி, மாலை, மாம்பழம், மாங்காய், புடலை(petola), சுருட்டு, கூலி, அச்சு, முறுக்கு, வெண்டை - வெண்டி, தயிர்(tairu), பற்றி (pateri) .. எனப் பல.


முடிபுரை

‘NOSTRATIC’ அதாவது நமது(நமது மொழி) என்று உலகமக்கள் யாவரும் ஒருநிகர் உரிமைகொண்டாடும் வகையில், உலக மொழிகள் அனைத்துக்கும் உறவு மூலம் காட்டி; உறவுப் பாலமும் அமைத்துத்தரவல்ல மூல மொழிவளம் தமிழ் என்ற உருவில் இன்னமும் தெளிவாக அடையாளம் காணத்தக்க நிலையில் உள்ளது. இது நமக்கெல்லாம் பெருமையும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழ்மொழி உலகப் பொதுமொழி – உலகப் பெருமொழி – உலகத் தாய்மொழி – உலக மூலக் கருமொழி – உலக மாந்தர் முதுசொம் என்பது நாம் பெறுகின்ற திறந்த முடிபு. மேல்விளக்கத்துக்கு என் ‘மலாய்-தமிழ் உறவுகள்’ எனும் நூலிற் காண்க.

இற்றைத் தமிழைக் கொண்டு பார்த்தால், இதுவரையில் எடுத்துக்காட்டிய செய்தி எதுவுமே புரியாது. ஏனெனில், இந்த உறவு இன்று தோன்றிய உறவன்று; மாறாக தொன்று தோன்றிய தொல்லுறவு. அதனைத் தொன்மை நிலையில் சென்றுதான் காணமுடியும்.

தமிழக அரசும் தமிழுக்காக நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களும் உடனடியாக இந்த வேர்ச்சொல் ஆராய்ச்சித் துறையை உலக ஒருமைப்பாட்டை மூலமாந்த மரபுப்படி இயல்பாகப் பேணிக்காப்பதற்குத் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆய்விருக்கைகளை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை. இது தமிழ்கூறு நல்லுலகிற்கும் உலகப் பொதுவிற்கும் காலத்தினாற் செய்திடும் பன்மாண் செய்ந்நன்றி. தக்கார் ஆவன செய்க; தென்கிழக்கு ஆசியாவில் பணியாற்றிவரும் எளியேன் தமிழக அரசுடன் இணைந்து; தொடர்ந்து பங்காற்றவும் பாடாற்றவும் அணியமாக இருக்கின்றேன். வாழ்க உலகத் தமிழுறவு! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
Enhanced by Zemanta