Monday, July 6, 2009

இஃதிருக்க அஃதெதற்கு?

மனம், மனது இவை தமிழ்ச்சொற்கள். மனது பேச்சுவழக்கில் மனசு என்று வழங்கும். வடமொழியில், மனசு > மனஸ் என்று திரிபுபெற்றுவிட்டது. மனஸ் என்பதிலிருந்துதான், மானஸ் > மானஸ(ம்) என்றும்; மானஸீக(ம்) என்றும் வேறு பல சொற்களை வடமொழிவாணர்கள் புனைந்து கொண்டனர். 

மனம், மனது என்பவற்றுக்குமேல், மனம்-மனது-மனத்தியம், மனத்திகம் என்பவற்றை முறையே மானஸம், மானஸீகம் என்பவற்றுக்கு ஈடாகப் பயன்படுத்தலாம். மானதம் - மானசம் - மானஸம் என மூன்று வடிவங்களில் காணப்படினும் மூன்றுக்கும் பொருள் ஒன்றுதான் . கருத்து, மனது என்பதே இவற்றின் அடிப்படைப் பொருள்விளக்கம். மானசபூசை என்பது மனப்பூசை; மானசீக குரு என்பது மனத்திக குரு.



தலைமைத் தமிழியல் நோக்கு

தமிழியல் ஆய்வுக் களம் அமைக்கப்பெற்றதன் அடிப்பபடையான நோக்கும் போக்கும் குறித்து ஈண்டு சிறிது எடுத்துரைப்பது நலம் எனக் கருதி இவை உரைக்கப்பெறுகின்றன.


முதலில், நாம் தமிழர். தமிழ் என்னும் பெயரியல்வழி உலக வாழ்க்கையில், நம்மை, நம் பிறப்பை, பிறப்பின் இருப்பை, இருப்பிற்கு வாழையடி வாழையென ஈட்டிவரும் சிறப்பை, எந்த நிலையிலுள்ள தமிழருக்கும் மிகப் பொதுவாக, சரிநிகர் சமமான ஓரொத்த வாழ்வியல் மதிப்பில் வைத்திருப்பது தமிழ்மொழி.

தமிழர் காலந்தோறும் தாம் எதிர்கொண்ட அயலவர் வழிசார்ந்த உறவுநிலை மற்றும் பகைமை நிலைகளால் தம்மை யாதானும் ஒரு நம்பிக்கைமுறை அல்லது சமயம் அல்லது மதம் அல்லது இவை எதுவுமே இல்லாத நிலையில் சார்புப்படுத்திக்கொள்வது அவர்களின் உரிமை எனக் கூறும்போது, அவர்கள் வேறுபட்ட பல நிலையில் உள்ளவர்களாவர்.

தமிழர் தம்மை முற்றும் முழுதும் தமிழராகவே நினைப்பதும் இயங்குவதும் ஒரு நிலை. தம்மை யாதானும் ஒரு நம்பிக்கைமுறை வழியே அடையாளப் படுத்திக் கொள்ளும் தன்மையோடு தமிழரென்ற நினைவையும் உடன் கொண்டவர்களாகச் சிந்திப்பதும் செயல்படுவதும் வேறொரு நிலை.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமன்று; கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமன்று; அஃது தமிழர் என்னும் இயல்புத் தன்மைக்கு, இனத் தன்மைக்கு உயிர்ப்பு நல்கிவரும் உயிரூற்று. தமிழை மொழியாக மட்டுமே பார்த்தவர்களும், அதன்பால் எந்தக் காலத்திலும் அன்புகொள்ள மாட்டார்கள். அதனை ஒரு புறப்பொருள் அல்லது உணர்ச்சியற்ற சடப்பொருள் போலத்தான் கூறுவர்; குறிப்பர்; அறுதியிடுவர்.

ஆனால், தமிழ் என்பதை உள்ளம் - உணர்வு - பண்பு - அறிவு - ஆளுமை -திறன் - உறவு - வாழ்க்கைநெறி என்று சிந்திப்பவர்கள் எல்லாவற்றையும் தமிழினிடத்திலேயே தேடிக்கொள்வர்;  அப்படித் தேடிக் கொண்டவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காப்பர்; காப்பவற்றுக்கு மேல்வளர்ச்சி மேம்படுத்தங்களைக் கொணர்வர். எக்காரணத்தைக் கொண்டும் அதன் கட்டமைப்பைக் குலைந்துபோக ஒருநாளும் யாருக்கும் இடம் தர மாட்டார்கள்.

ஒட்டுமொத்தமாக மேற்சொன்ன அனைத்தையும் தமிழியல் மரபு என்னும் கட்டுக்காவலுக்குள் வைத்துக் கண்போல - பொன்போல - உடல்போல - உயிர்போல பாதுகாப்பர்; இறைபோல மதிப்பர்; துதிப்பர்; கதிப்பர். பொங்குதமிழ்க்கும் தமிழர்க்கும் இன்னல் விளைத்தால்,சங்காரம் நிசமென்று சங்கமுழக்கம் முழங்கித் தமிழ்ப்பகைவர்தம் [உட்பகை-வெளிப்பகை] அறிவுத் திமிர்ப்பை உருக்கிக் கருக்கிவிடுவர்.


தமிழைத் தமிழாக அதற்கேயுரிய மாற்றருஞ் சிறப்பின் மரபியல்புப்படிப் புரிந்துகொள்வதுதான் எல்லாவற்றுக்குமே மூலமான உண்மைத் தமிழ்ப் புரிதல். அவ்வாறு உள்ளத்திலும் உணர்விலும் இழைத்துணர்ந்து பெறப் படும் அதன் தூய வடிவத்தினின்றும் செயற்படுவதே தமிழாரகும் தகுதி.

தமிழால் பாரதி தகுதிபெற்றதும்; பாரதியால் தமிழ் தகுதிபெற்றதும் என இரண்டு நிலைகளைப் பாவேந்தர் பாரதிதாசனார் துல்லியமாகக் குறிப்பிடுகின்றார். அதாவது முதலில், தமிழால் தான் வளர்ச்சிபெறுதல் - தகுதி பெறுதல்; அப்படித் தகுதிபெற்ற பின்னர், தான் தன்னை ஈன்று புறந்தந்துள்ள; அறிவறிந்த உயர்நிலைக்கு ஏற்றுவித்த தமிழுக்குத் தனது மாசற்ற தகுதியால் வளஞ்சேர்த்தல் - வளர்ச்சி தருதலின் வாயிலாகத் தமிழின் தகுதி "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்" என்னும் பாங்கில் அமையபெறுவதாகும். தமிழ்செய்தல் என்று இதைத்தான் திருமூலரும் குறிக்கின்றார்.

"நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்" என்று ஒரு முழுமைநிலை பெறுவதுதான் மேற்சொன்ன தகுதிபெறுதல் என்பதன் பயனிலையாகும். வாருங்கள் தோழ்ர்களே! தோழியர்களே! தமிழால் தமிழ்செய்வோம் - தமிழ்செய்து தமிழாவோம்!



தமிழில் பெயர் வை!

தமிழில்
பெயரை வை!


தமிழா...!
உயிரில் தமிழை வை;
தமிழில் உயிரை வை!
உயிர்த்தமிழில் உனக்கும்
உன்பிள்ளைக்கும் பெயரை வை!
வீட்டுக்கும் தமிழில் பெயர் வை!
உன் நிறுவனத்துக்கும்
தமிழில் பெயர் வை!
நாட்டுக்கும் நடப்புக்கும்
நல்ல தமிழையே வை!
ஏட்டுக்குள் எழுத்துக்குள்
அறிவுக்குள் புரிவுக்குள்
ஆன்மிக மெய்ப்பொருளுக்குள்
அன்னைத் தமிழில் அடைப்படை செய்!
அடுத்த தலைமுறைக்கு ஆவன செய்!
எடுத்த இனப்பிறப்பிற்கு
இயல்வன செய்!
இதனை மனத்தில் வை!
முதல் எடுத்துக்காட்டாக
உன்னைச் செய்!
உன் குடும்பத்தைச் செய்!
செந்தமிழில் திறமை செய்!
செந்தண்ணெறியில் இறைமை செய்!
செம்மொழிக்கு உலகில் உரிமை செய்!
உன்னை நீயே உணர்ந்து செய்!
ஆக்கம்:- இர. திருச்செல்வம்

நல்ல மக்கள் மகிழ்வதுண்டோ?

நரகல் சுவையை நாய்தான் விரும்பும்
நல்ல மக்கள் விரும்புவ துண்டோ?
நரகல் குழியில் புழுக்கள் மகிழும்
நல்ல ம்க்கள் மகிழ்வ துண்டோ?

நறவமே பூதொறும் தேடும் தேனீ
நரகலே யாதிலும் தேடும் பீயீ
உருவமும் உணர்ச்சியும் உண்பது போலே
உண்டா குமென்கிறேன் உண்மையி னாலே!


பொறுப்பில் லாத இலக்கியப் போக்கு
பொறுக்கித் தனத்தில் புழுத்த புழுப்பு
நெருப்பில் இல்லை விலக்கிய நோக்கு
நெருப்பைக் கொள்பவர்க் குள்ளது பொறுப்பு


நெருப்பில் போல இலக்கிய ஆக்கம்
நெருப்பில் இல்லை அழுக்கின் தாக்கம்
உறுப்பில் உணர்ச்சியில் உள்ளவை ஆக்கம்
பொறுப்பு டையார்க்(கு) அறந்தரும் நோக்கம்


அன்பெனும் அகத்தின் உறுப்பில் பூக்கும்
ஆண்பெண் அருமையைக் கட்டிக் காக்கும்
பண்பெனும் பொதுமையில் அனைத்தையும் சேர்க்கும்
பயனெனும் விளைவினில் பதம்பல சீர்க்கும்


அகமெனப் படுவது மறைநிலை யுடையது
ஆண்பெண் தனிநிலை உறவினில் அடைவது
புறமெனப் படுவது பொதுநிலை யுடையது
புகழ்பட அனைவரும் செயல்வளம் முடைவது





இவர்தான் திருமாலனார்

இவர்தாம் திருமாலனார்



நெருப்பாற்றல் சொற்களிலே தெறித்து வீழும்
நினைப்பாற்றல் தமிழ்ப்பற்றை மிகைத்துச் சூழும்
குறிப்பாற்றல் தொண்டுணர்வை வரித்தே ஆளும்
கூராற்றல் கொள்கைதனை விரித்து நீளும்
பொறுப்பாற்றல் இனவரம்பின் மொய்ம்பைச் சாலும்
புலனாற்றல் மெய்யறிவின் விளிம்பைக் கோலும்!
அருப்பாற்றல் தொகைவல்லார்! எங்கள் அன்பின்
அடலேற்றைத் தமிழ்ப்பேற்றை வாழ்த்தாய் நெஞ்சே!




சொல்லாற்றல் பொருள்விரிப்பில் தகைமை காணும்
சுவையாற்றல் நாவிரிப்பில் புலமை காணும்!
உள்ளாற்றல் தமிழன்பின் வளமை பேணும்
உணர்வாற்றல் மொழியினத்தின் இளமை ஈனும்!
நல்லாற்றல் தமிழ்ச்சமய நெறியைக் கூறும்
நயனாற்றல் மரபுரிமைச் செறிவை வீறும்!
கொல்லாற்றல் தமிழ்வேங்கை! எங்கள் அன்பின்
கோன்அவரை வான்அவரை வணஙாய் நெஞ்சே!



அன்பாற்றல் மனவெளியின் அகல மாகும்
அறிவாற்றல் மொழிநிலையின் ஆழ மாகும்!
இன்பாற்றல் இனமீட்பின் எல்லா யாகும்
ஈர்ப்பாற்றல் கலைப்பணியின் கொல்லை யாகும்!
நண்பாற்றல் தமிழுயிர்க்கே பால மாகும்
நள்ளாற்றல் தமிழ்நெறிக்கே மூல் மாகும்
பண்பாற்றல் மிக்கவரை எங்கள் அன்பின்
பாவலரை! காவலரை! போற்றாய் நெஞ்சே!



பாவாக்கம்: பாவிளங்கோ கோவி. மணிதாசனார்,
பாடாங் செராய், கடாரம்.

அறியாமை பெற்றதுதான் அறிவென்பது

அறியாமை
பெற்றதுதான்


எடுப்பு


அறியாமை பெற்றதுதான் அறிவென்பது - அதைப்
புரியாமல் வாழ்வதுதான் புதிரென்பது - தன்னை


தொடுப்பு


விழியாலே நீர்சிந்தி மனம்வாடலாம் - அந்த
நிலைகண்டும் பிறருன்னை நகையாடலாம்
அழுதாலே மனத்தூய்மை பெறும் உண்மையை
அறிந்தார்கள் அறிவார்கள் நிலைத்தன்மையை - அறி


முடிப்பு


பொருளோடு புகழ்யாவும் உனைச்சேருமா? - மனம்
பொருந்தாத வினையாவும் விரைந்தோடுமா?
அருளோடு பகையாவும் உனைநாடுமா? - வரும்
அன்பெல்லாம் பகையோடு வினைதேடுமா? - அறி


பாடலாக்கம்: தமிழிசை வித்தகர் அ.பு.திருமாலனார், (1978)