Wednesday, August 25, 2010

காயத்திரி(காயத்ரீ)

புணர்த்திய வடிவில்:

ஓம் பூர்புவஸ்ஸுவ
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

பிரித்த வடிவில்:

ஓம் பூர் புவ(ஸ்) ஸுவ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க தேவஸ்ய தீமஹி
திய யா ந: ப்ரசோதயாத்

ஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக!
oபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அல்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது.

oபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். ‘க’கர ஒலி வருக்கம் ‘வ’கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க.

oஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். ‘மேலிடம்’என்று பொருள்படும் ‘சுவல்-சுவர்’ எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும்.

இம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள்.

oய: = யார்
[ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே ‘ய’ என்றாயிற்று.]

oந: = நம்முடைய
[‘நம்’ என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே ‘ந’ எனத் திரிபடைந்துள்ளது.]

oதிய: அறிவைத்
[அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக ‘அறிவு’ என்ற பொருளையும் அதற்கும் மேலாக ‘ஞானம்’ என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ]

o ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ;

o தத் = அந்தச்
[‘அது’ எனப் பொருள்படும் ‘தான்’ என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் ‘தன்-தத்’ என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ]

o தேவஸ்ய = சுடருடைய
[தீய்(எரி) என்னும் பொருள்தரும் ‘தேய்’ என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ’ என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே ‘தேவ + அஸ்ய’ என்பதாகும். ]

o ஸவிது = கடவுளின்

o வரேண்யம் = மேலான
[ ‘பரம்’ எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் ‘வரம் > வரன்’ என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் ‘ன்’ என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.]

o பர்க = ஒளியைத்
[ ‘புல்’ என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து ‘பர்க்’ என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ]

o தீமஹி = தியானிப்போமாக!
[ ‘துய்’ எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், ‘திய் + ஆனம் . தியானம்’ என்னும் சொல் பிறந்துள்ளது. ‘தீமஹி’ எனும் சொல்லின் முதனிலையான ‘தீ’ என்பது துய் > திய் > தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ]

இச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே. இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே!

No comments: